நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சி அடைய செய்யும் மருந்து மற்றும் உணவுகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.உடலில் உஷ்ணம் அதிகமாகும்போது சிறுநீர்தாரையில் எரிச்சல், ஆசனவாயில் எரிச்சல், வயிற்று வலி போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு நாவல் பழம், பருப்பு கீரை, இளநீர் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது நாவல் பழம். உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றுகிறது.பருப்பு கீரை அற்புதமான மருந்தாகி பயன் தருகிறது. பறவைகள் விரும்பி உண்ணும் இது, எலும்பு, கண்களுக்கு பலம் தருகிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதை சரிசெய்யும் மருந்தாகிறது.