கன்னியாகுமரியில் பாஜகவினர் மறியல் போராட்டம்…!

பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில்  பாஜகவினர் போராட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகியை திருநெல்வேலி திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவர் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பாஜக நிர்வாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் பாஜக நிர்வாகியை சந்தித்து நலம் விசாரித்தார். பாஜக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து திமுக எம்பி ஞானதிரவியத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, திருநெல்வேலி பாரதியார் சிலை முன்பாக, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்ததால், போராட்டத்தில் ஈடுப்பட்ட பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் நள்ளிரவு கைது செய்தனர். இந்நிலையில், நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை  கண்டித்து கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan