“ஆதீன பாரம்பரியங்கள்;இந்து சமய அறநிலையத்துறை தலையிடாது” – அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,தங்களது குழுவினர் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால்,இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக் கோயிலாக இருப்பதால்,கோயில் விவகாரங்களை விசாரிக்க குழு அமைக்க அதிகாரம் உண்டு என்று தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை பதில் தெரிவித்தது.

இதனிடையே,சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்திருந்த நிலையில்,கனகசபை மீது ஏறி வழிபடும் நடைமுறை தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது எனக் கூறிய இந்து சமய அறநிலையத்துறை,பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில்,மயிலாடுதுறையில் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார்.இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில்:”சைவ முறைகள் மட்டுமல்லாது,தமிழை வளர்க்கும் பணியிலும் ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன.இதனால், ஆதீனங்களுக்கான சிறப்பை தமிழக அரசு எப்போதும் வழங்கும். குறிப்பாக,அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது.

இதனிடையே,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே சிதம்பரம் நடராஜர் கோயிலில்,கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.மாறாக,சிதம்பரம் நடராஜர் கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இந்து அறநிலைத்துறைக்கு இல்லை.

இருப்பினும்,இந்த பொதுக் கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் நடந்தால் அதில் தலையிடும் உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு.உடனே,இது தீட்சிதர்கள் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான என எண்ணிக்கொள்ள வேண்டாம். மேலும்,நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்பட்டு வரும் நிலையில்,அனைத்து கோயில்களிலும் கணக்கு வழக்கு பார்ப்பது என்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்.” என்று தெரிவித்தார்.

Leave a Comment