ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது.

21 மாநிலங்களில் 102 தொகுதியில் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை ஒரு சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சரியாக மாலை 6.00 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்கு மேல் வந்தவர்கள் யாரும் வாக்களிக்க வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கைக்கிலாதாங்கல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் 250 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் 8 மணிக்கு மேலாகியும் வாக்களித்து வந்தனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் தோகைப்பாடி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுது. இவ்வாறு ஒரு சில இடங்களில் நேரம் கடந்தும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

இதன் காரணமாக, தற்போது வரை துல்லியமான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாகவில்லை. இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என குறிப்பிட்டார்.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகள் பதிவானதாகவும், அடுத்ததாக தர்மபுரியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாகவும், சிதம்பரத்தில் 74.87 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது .குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளும், தென் சென்னையில் 67.82 சதவீத வாக்குகளும், மதுரையில் 68.98 சதவீத வாக்குகளும், வடசென்னை 69.26 சதவீத வாக்குகளும் பதிவாகியதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுவரை, பதிவான வாக்குகள் விவரங்கள் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் மட்டுமே என்றும், தபால் வாக்குகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும். இறுதியாக துல்லிய வாக்குப்பதிவு சதவீதம் நாளை பகல் 12.00 மணி அளவில் வெளியிடப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மாலை வாக்குப்பதிவு நிறைவு பெறும் நேரமான 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரத்தில் மட்டும், தமிழகத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும், தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமாக பதிவான வாக்குகள் 72.44 சதவீதம் மட்டுமே. இந்த வருடம் அதனை தாண்டி வாக்குகள் பதிவாகி இருக்கும் என கூறப்படுகிறது. துல்லியமான வாக்கு சதவீதம் தெரியவர நாளை வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.