எவ்வளோ நாள் வேணும்னா எடுத்துக்கோங்க… கெஜ்ரிவால் ‘ஷாக்’ ரீப்ளே.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-2022 ஆண்டு காலத்தில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டத்தின் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய்  வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி மாநில முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க கோரி அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகத காரணத்தால் கடந்த வாரம் கெஜ்ரிவால் வீட்டிற்கே சென்று விசாரணை செய்து கைது செய்தது அமலாக்கத்துறை.  தற்போது வரையில், அமலாக்கத்துறை விசாரணை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்றுடன் விசாரணை காவல் நிறைவடைவதால் இன்று டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் ஹவாலா (வெளிநாட்டு பண பரிவர்த்தனை) பணம் கைமாறியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது வரையில் அவரது போன், லேப்டாப் பாஸ்வேர்ட் சொல்லாமல் இருந்து வருகிறார். அதனை ஹேக் செய்து பார்க்க வேண்டும். அதனால் 7 நாள் விசாரணை காவலில் அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், EDயிடம் எனக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. யாரோ சிலர் கூறியதன் பெயரில் என்னை இதில் சிக்கவைக்க பார்க்கிறார்கள். இதன் மூலம் ஆம் ஆத்மியை அழிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் விசாரணைக்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் (அமலாக்கத்துறை) விரும்பும் வரையில் எங்களை அவர்கள் விசாரிக்கலாம்.

அவர்களின் நோக்கம் 2 தான். ஒன்று ஆம் ஆத்மியை அழிக்க வேண்டும். இல்லையென்றால் எங்களிடம் மிரட்டி பணம் பெற வேண்டும். இதற்கு முன்னர் அமலாக்கத்துறை இதே போல சில தொழிலதிபர்களை விசாரித்து உள்ளது. அவர்கள் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்த பின்னர் அவர்கள் ஜாமீனில் சென்றுள்ளனர். அதுபோல தான் இந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக வாதிட்டார்.

இதனை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.