வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்த மேலும் ஒரு சோகம்! கேப்டன் நிக்கோலஸ் பூரன் பதவி விலகல்.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகுவதாக அறிவித்துள்ளார். இருமுறை டி-20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்து முடிந்த டி-20 உலககோப்பைக்கு நிக்கோலஸ் பூரன் தலைமை வகித்தார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இது குறித்து பூரன் கூறியதாவது, டி 20 உலகக் கோப்பையின் பெரும் ஏமாற்றத்திற்குப் பிறகு நான் கேப்டன் பதவியைப் பற்றி நிறைய யோசித்தேன். நான் மிகுந்த பெருமையுடனும் அர்ப்பணிப்புடனும் கேப்டன் பொறுப்பேற்றுக்கொண்டேன். டி20 உலகக் கோப்பையைப் பொறுத்து ஒரு அணியை வரையறுக்க கூடாது.

கடந்த ஆண்டிலிருந்து கீரன் பொல்லார்ட் இல்லாத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பூரன் வழிநடத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 சர்வதேச தொடரை சொந்த மண்ணில் (4-1) வென்றார். இந்த ஆண்டு மே மாதம் பொல்லார்ட் பதவி விலகியதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக அதிகாரப்பூர்வமாக பூரன்  நியமிக்கப்பட்டார்.

இது நான் என் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்கவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன், கேப்டன் பதவியில் இருந்து இப்போது நான் விலகுவதன் மூலம், அணிக்கு மற்றும் தனிப்பட்ட முறையில் எனக்கு நல்லது என்று நம்புகிறேன். அணிக்கு தேவையான ரன்களை குவிப்பதில் முழு கவனம் செலுத்தப்போவதாக நிக்கோலஸ் பூரன் மேலும் கூறினார்.

கடந்த மாதம் இதே காரணத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து பில் சிம்மன்ஸ் விலகப்போவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment