நவீன கொள்ளைகாரனாக மாறிய அமெரிக்கா.! ரஷ்யா to தமிழகம் வரை.!

அமெரிக்காவின் கொரோனா நிலவரம் :

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 503,177 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,761 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா தற்போது திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் மருத்துவ உபகரணங்களை தனது நாட்டுக்கு நூதன முறையில் மறைமுகமாக மிரட்டி, எச்சரித்து எடுத்துக்கொள்கிறது. 

ரஷியா-அமெரிக்கா வர்த்தக தடை.! ஒரே போன் காலில் வெண்டிலேட்டர் ஏற்றுமதி :

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை, அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அமெரிக்காவுக்கு உதவ ரஷிய அதிபர் புதின் முன்வந்தார். அதன்படி, வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் மிகப்பெரிய சரக்கு விமான ரஷியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ரஷியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய தடை விதித்தது.

மேலும், உலகின் பல்வேறு நாடுகளையும் ரஷிய நிறுவனங்களோடு வர்த்தகம் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியது. தங்கள் விதித்த தடைகளை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷிய நிறுவனங்கள் மீது விதித்த வர்த்தகத்தடைகள் இப்போதும் தொடர்ந்து இருக்கும் நிலையில், அமெரிக்காவிற்கு மருத்துவ உபகரணங்களை ரஷ்யா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ உபகரணங்களை அடித்து பிடுங்கும் அமெரிக்கா :

ஜெர்மனி – அமெரிக்கா : 2 லட்சம் மாஸ்குகள் 

உலக நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் மருத்துவ உபகரணங்கள், மாஸ்குகளை அடித்து பிடுங்கும் வேலையில் அமெரிக்கா தற்போது இறங்கியுள்ளது. இதுவரை மூன்று முறை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய மாஸ்குகளை, அமெரிக்கா தங்கள் நாட்டிற்கு திருப்பியுள்ளது. ஜெர்மனிக்கு சீனாவில் இருந்து 2 லட்சம் மாஸ்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதை நடு வானில் கூடுதல் பணம் கொடுத்து அமெரிக்கா வாங்கியது. இதனால் ஜெர்மனுக்கு செல்ல வேண்டிய மாஸ்க் நியூயார்க் நகரத்துக்கு சென்றது.

பிரான்ஸ் – அமெரிக்கா : 20 லட்சம் மாஸ்குகள் 

பிரான்சிற்கு 20 லட்சம் மாஸ்குகளை சீனா ஏற்றுமதி செய்ய இருந்தது, சீனாவிடம் பிரான்ஸ் அவசர அவசரமாக இந்த 20 லட்சம் மாஸ்குகளை ஆர்டர் செய்தது. ஆனால், ஏற்றுமதி செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கா அதை தங்கள் பக்கம் திருப்பியுள்ளது. பிரான்ஸ் கொடுத்ததை விட அதிக தொகை கொடுத்து அமெரிக்கா இந்த மாஸ்குகளை தங்கள் நாட்டிற்கு மாற்றிக்கொண்டு உள்ளது. இதனால் மாஸ்க் இன்றி தவிக்கும் நிலைக்கு பிரான்ஸ் சென்றது.

பிரான்ஸ், ஜெர்மனியை தொடர்ந்து இந்தியாவை மிரட்டிய ட்ரம்ப் :

பிரான்ஸ், ஜெர்மன் என இரண்டு நெருக்கமான நாடுகளை மருந்துக்காக பகைத்துக் கொண்ட அதிபர் டிரம்ப், தனது நண்பர் பிரதமர் மோடியையும் பகைத்துக் கொண்டார். கொரோனாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்யவில்லை என்றால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று மறைமுகமாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து மருந்துகள் ஏற்றுமதி தடையை உடனடியாக நீக்கி, அமெரிக்காவிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது. இந்த முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 

WHO-வை எச்சரித்த ட்ரம்ப் :

வரிசையாக இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை பகைத்துக் கொண்ட டிரம்ப் இன்று உலக சுகாதார மையத்தையும் விட்டு வைக்காமல் அவர்களையும் பகைத்துக் கொண்டார். உலக சுகாதாரம் மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள் என்றும் உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அதனால் தாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனை குறித்து பேசிய அதிபர் டிரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு வரவிருந்த ரேபிட் கிட அமெரிக்காவிற்கு திருப்பம் :

தமிழகத்தில் இன்று சுகாதாரத்துறை தலைமை செயலர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது , தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்றும், தமிழகம் சார்பில் 4 லட்சம் ரேபிட் கிட் ஆர்டர் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். சீனாவில் தொடங்கிய வைரஸ் அமெரிக்காவிற்கு பரவாது என்று லட்சமாக இருந்ததால், தற்போது கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ட்ரம்ப் திணறி வருகிறார். இதனால் தமது நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிற நாடுகளுக்கு செல்லும் மருத்துவ உபகரணங்களை மிரட்டி தனது நாட்டிற்கு நவீன முறையில் கொள்ளையடித்து வருகிறார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்