உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும் – ஜி.கே.வாசன்..!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கே.என்.நேரு, ஊராட்சிகள் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை செய்தார்.

இதற்கிடையில், அனைத்து கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டமன்ற தேர்தலுக்கு பின் பத்திரிகை நண்பர்களை முதல் முறையாக சந்திக்கிறேன். காமராஜர் பிறந்தநாளை தடுப்பூசி விழிப்புணர்வு நாளாக கொண்டாடுவோம். 

வரும் 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்தநாளன்று மக்களிடம் சென்று தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். மேலும், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும். அதிமுக கூட்டணி, வெற்றிக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், நிறைய விஷயங்களை கற்று கொண்டோம் என தெரிவித்தார். 

author avatar
murugan