அதிமுகவில் ஒரே நேரத்தில் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 10 பேர் நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி!

ஒரே நேரத்தில் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 10 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 10 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

அதன்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, நாகர்கோவில தொகுதி துணை செயலாளர், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ராஜன், இணைச் செயலாளர் டி.லதா ராமச்சந்திரன், தோவாளை ஒன்றிய முன்னாள் செயலாளர் எஸ்.கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயலாளர் எஸ்.மாடசாமி, தோவாளை தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் பி.மோசஸ் ராமச்சந்திரன் ஆகியோரும்,

வடக்கு ஒன்றியபொருளாளர் ஆர்.தென்கரை மகாராஜன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், தோவாளை வடக்கு மாவட்ட பிரதிநிதி எஸ்.ஜெயந்தி ஆகியோரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜி.நாஞ்சில் டோமினிக், பாசறை இணைச் செயலாளர் எம்.வரதராஜன் ஆகியோர் இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே, சசிகலா மற்றும் திமுவினருடன் தொடர்பில் இருப்பவர்கள், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் என பலரையும் அதிமுகவில் இருந்து தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ உட்பட 10 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்