தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் ! கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் அருளானந்தம் அதிரடியாக நீக்கம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதனைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளிகள் 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆகவே , 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால்,பாபு ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் பதவியில் இருந்து அருளானந்தம் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதாவது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.