அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் ! கட்சியின் தலைமையின் முடிவை ஏற்போம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் அதிமுக தலைமையின் முடிவை ஏற்போம் என்று  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும். அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இதன் பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே என்று பதிவிட்டார்.இதனால் அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி,சட்ட அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகம் , வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.இதன் பின்னர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. அதிமுகவின் முதல்வர் வேட்பளார் யார் ? என்று உரிய நேரத்தில் முடிவு  செய்யப்படும் என்று கூறினார். இதற்குஇடையில் தான் 2021ல் நிரந்திர முதல்வர் ஓபிஎஸ் என தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டது .

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை எழுந்து வருகிறது.இதற்கு இடையில்  அமைச்சர்கள் ஜெயக்குமார்,செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதன் பின் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இறுதியாக  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில்,”கருத்துப் பரிமாற்றம் செய்வதன் மூலம் எதையும் சாதிக்கப்போவதில்லை – அரசின் சாதனை, திட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள்”.”கடந்த சில நாட்களாக நிர்வாகிகளில் சிலர் கூறிய கருத்துக்கள் மாற்றாருக்கு விவாத பொருளாக மாறிவிட்டன” .ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்”. அதிமுகவில் அனைத்து நிலைகளில் உள்ளவர்கள் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அரசியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.