ரேசன் வாங்க ஆதார் எண் போதும் – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை என்றும்,மாறாக ஆதார் எண்ணை தெரிவித்து பொருட்களை  பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு:

இது தொடர்பாக,பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் மக்களவையின் கேள்வி நேரத்தின்போது நேற்று பேசிய மத்திய நுகர்வோர் விவகாரம்,உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

“மத்திய அரசானது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் அண்டை மாநிலங்கள் அல்லது ஊர்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் உள்ள சிக்கலை தீக்கும் பொருட்டு,பிரதமர் மோடி அவர்கள் இதனை வகுத்தார்.

புதிய ரேஷன் கார்டு தேவையில்லை:

அந்த வகையில்,இந்த திட்டத்தின் மூலம்,ஒரு புலம்பெயர் தொழிலாளி, தான் எங்கு வேலைக்கு செல்கிறாரோ அந்த ஊரில் தனக்குரிய ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.அதே சமயத்தில்,அவருடைய குடும்பத்தினர்,அவர்கள் வசிக்கும் ஊர்களில் தங்களுக்குரிய ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே,வேலைக்காக வேறு ஊர்களுக்கு செல்லும்போது,அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை.மாறாக, தங்களது ரேஷன் கார்டின் எண் அல்லது ஆதார் எண்ணை ரேஷன் கடையில் தெரிவித்து, ‘பயோமெட்ரிக்’ மூலம் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பயோமெட்ரிக் அடையாளம்:

மேலும்,சொந்த ஊரில் இருந்தாலும்,ரேஷன் கார்டு கொண்டு செல்லாமல்,ஆதார் எண்ணை தெரிவித்து,பயோமெட்ரிக் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு பின்னர் ரேசன் பொருட்களை பெறலாம்.அந்த வகையில்,நாட்டில் உள்ள 77 கோடி மக்கள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்”,என்று தெரிவித்தார்.

மேலும்,”கொரோனா தொற்று பரவல் காலத்தில் 19 மாதங்களாக ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்கு கூடுதலாக தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டதனால் யாரும் பட்டினி கிடக்கவில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது’,என்றும் கூறினார்.