#Justnow:வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ இணைப்பு – தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இருப்பினும்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா”  கடந்த டிசம்பர் மக்களவையில் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது.மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் இதனை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதற்கான விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.இன்றுடன் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஓய்வு பெரும் நிலையில், நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:”ஆதார் விவரங்களைப் பகிர்வது வாக்காளர்களுக்கு விருப்பமானதாக இருக்கும்,ஆனால் அவ்வாறு செய்யாதவர்கள் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும்,ஆதார் எண்ணைப் பகிர்வது வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உதவும்.குறிப்பாக,வாக்காளரைப் பற்றி இன்னும் தெளிவான விவரங்கள் தெரிந்தால்,தேர்தல் எப்போது நடைபெறும்,அவர்களின் தொலைபேசி எண்களில் பூத் (விவரங்கள்) போன்ற பல சேவைகளை நாங்கள் வழங்க முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே,தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில்,இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.அதன்படி,ராஜீவ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக இன்று (மே 15 ஆம் தேதி) முதல் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.

 

Leave a Comment