இனி புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் ‘ஆதார்’ – UIDAI திட்டம்!

இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம்(UIDAI),ஆதார் தவறாகப் பயன்படுத்துவதையும்,புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டு புதிய  திட்டங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.அதன்படி,புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இனி தற்காலிக ஆதார் எண்ணைப் பெற்றுக் கொள்ளும் வசதி கொண்டு வரப்படவுள்ளது எனவும்,பிறப்பு,இறப்பு தரவுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில்,பிறக்கும்போதே ஒரு யுஐடிஏஐ எண்ணை ஒதுக்கீடு செய்வது குழந்தைகள் மற்றும் குடும்பங்கள்,மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை பெறுவதை உறுதி செய்யும் என்றும்,பிறப்பு, இறப்பு பதிவு தரவுத்தளங்களுடனும்,பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுடனும் ஆதார் எண்களை ஒருங்கிணைப்பது அரசின் நேரடி பலன்களை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், அரசின் பல சலுகைகளை இறந்தவர்கள் பெயரில் மோசடி செய்து அதன் பலனை மற்றவர்கள் பெறுவதை தடுக்கும் என UIDAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக UIDAI மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: “குழந்தை பிறந்த உடன் ஆதார் கார்டினை பெற்றுக் கொள்ளலாம் என்றாலும், குழந்தைகளுக்கான பயோமெட்ரிக்ஸ் குறைந்தது ஐந்து வயதாக இருக்கும்போது எடுக்கப்படுகிறது.அதன்பின்னர்,எங்கள் குழுக்கள் குழந்தைகளின் குடும்பங்களை பார்வையிடும் மற்றும் அவற்றின் பயோமெட்ரிக் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை முடிக்கப்பட்டு, அக்குழந்தைகளுக்கான நிரந்தர ஆதார் எண்ணை ஒதுக்கப்படும். மேலும்,ஒரு குழந்தை 18 வயதாகிவிட்டால் பயோமெட்ரிக்ஸ் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது”,என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில்,ஒரு நபரின் முழு வாழ்க்கை சுழற்சி தரவை ஆதாருடன் இணைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம்,தவறான பயன்பாட்டை சரிசெய்வதாகும்.குறிப்பாக,பிறப்பு-இறப்பு தரவை ஒருங்கிணைப்பது அரசின் திட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.மேலும்,கடந்த எட்டு ஆண்டுகளில், ஏழைகள்,விவசாயிகள் மற்றும் பிறரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம்(நிதியுதவி) வழங்கவும் ஆதார் உதவியதாக மத்திய அரசு கூறியுள்ளது.

முன்னதாக,2021 டிசம்பர் வரை இந்தியாவில் 1.31 பில்லியனுக்கும் அதிகமான ஆதார் அட்டைகள் வெளியிடப்பட்டன.அதில் 99.7 சதவீதத்திற்கும் அதிகமானவை  வயது வந்தோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும்,ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளில் கால் பகுதியினர் மட்டுமே அடையாள தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment