தந்தையின் நினைவிடத்தை தேடி மலேசியா சென்ற நபர்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்..!

அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது என முதல்வர் ட்விட். 

தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.அக்.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன்.

இந்தப் பயணத்தில், திரு. திருமாறன் அவர்களது அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னால் திரு. இராமசுந்தரம் அவர்கள் வழங்கிய மிதிவண்டி குறித்து இன்றும் நினைவில் வைத்திருக்கும் திரு. பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட இராமசுந்தரம் அவர்களை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே!

தாய்த்தமிழ்நாடு திரும்பிய பின் தன் தாயையும் இழந்த திரு. திருமாறன் அவர்கள், ஆதரவற்றவராக அல்லாமல், பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன். வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment