“கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு முறைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது”-தமிழக அரசு..!

தமிழகத்தில் மியூகார்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்க, மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையில்,13 பேர் கொண்ட அலுவல் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும்,தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,இந்த பணிகளை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாம் கர்ப்பிணி பெண்கள் பராமரிக்கும் மையம் போன்றவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மே 26 ஆம் தேதியன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது,”தமிழகத்தில் இதுவரை 286 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இதற்காக மக்கள் பீதி அடையத் தேவையில்லை,இந்த நோய் எப்படி உருவாகிறது?,இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?,என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள பத்துக்கும் மேற்பட்ட வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைக்கவுள்ளது. அதற்கான கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடக்க இருக்கிறது.அந்த  கூட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்தார்.

அதன்படி,மருத்துவ வல்லுனர்களைக் கொண்ட குழுவின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில்,மியூகார்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்க,மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையில்,13 பேர் கொண்ட அலுவல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.