சிவகங்கை:சம்பளம் தராததால் பேருந்துக்கு தீ வைத்த ஊழியர்..!!பேருந்து எரிந்து சேதம்..!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சம்பளம் தராத ஆத்திரத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகளுக்கு கிளீனர் நேற்று தீ வைத்தார்.

தேவகோட்டையில் இருந்து பெங்களூரு, சென்னை, புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் நிறுவன பேருந்துகளை தேவகோட்டை கருதாவூருணி கண்டதேவி சாலையில் உள்ள தனியார் இடத்தில் நிறுத்துவது வழக்கம்.

இதில் பெங்களூரு செல்லும் பேருந்தில் ஓசூர் மூக்கண்டம் பள்ளி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (52) கிளீனராக உள்ளார். தனியார் நிறுவனத்தில் சம்பள பாக்கியாக ரூ. 5200 தர வேண்டும். அதுகுறித்து ஓட்டுநரான திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகனிடம் நேற்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் செந்தில்குமார் கேனில் இருந்த டீசலை எடுத்து பேருந்து மீது ஊற்றி தீ வைத்தார். இதில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. அப்போது அருகே இருந்த பேருந்துக்கும் தீ பரவியது. இதில் இரு பேருந்துகளும் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.

பின்னர் 2 பேருந்துகளும் எரிவதைக் கண்ட செந்தில்குமார் அச்சத்தில், தனது உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் செந்தில்குமாரை காப்பாற்றி போலீஸில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment