“தோழர் நல்லக்கண்ணு பல்லாண்டு காலம் வாழ வேண்டும்” – முதல்வர் நேரில் வாழ்த்து!

சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் தற்போது வரை மக்களுக்காக போராடி வரும் ஒரு மாபெரும் போராளிதான் தோழர் நல்லக்கண்ணு அவர்கள்.சாதீய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைகளிலும்,தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர்.தூய்மையான அரசியல் கரங்களுக்குச் சொந்தக்காரர் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர்.

ஏனெனில்,இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது.அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்.தமிழக அரசு இவருக்கு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும்,மீதி தொகையை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்த உன்னத மனிதர்.

இந்நிலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதன்படி, அவருக்கு பொன்னாடை அணிவித்து முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வருடன் திமுக பொதுச்செயலாளரும்,மாநில நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்களும் உடனிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர்:”97 வயது ஆனாலும் அவர் இளைஞர்தான்,அவரை இன்னும் இளைஞராகவே பார்க்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் நல்லக்கண்ணு அவர்களை சந்தித்து வாழ்த்து கூறுவதோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்து வாழ்த்துக்களை பெரும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது.மக்களுக்காக நீண்ட நாட்களாக போராடி வரும் நல்லக்கண்ணு அவர்களுக்கு திமுக சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவில் அவர் நூற்றாண்டு காணவுள்ளார்.அதை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறோம்.அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்”,என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்,பிற அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.