மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை தண்டனை; 5 லட்சம் அபராதம் – மத்திய அரசு!

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்குபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் பரவி வந்தாலும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள் போன்றோர்கள் மிகவும் மதிக்கத்தக்கவர்களாகவே கருதப்பட வேண்டும். ஆனால், கொரோனாவால் தங்கள் உறவினர்கள் உயிரிழந்து விடும் பட்சத்தில் பலர் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதனையடுத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள் நேற்று  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தாக்குதல் போன்றவை அவர்களது மன உறுதியைக் குலைத்து, பாதுகாப்பின்மையை உருவாக்கும் எனவும், இனி மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுபவர்கள் மீது 2020ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 2020 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். ஆனால் கொடும் காயங்கள் ஏற்பட்டிருந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கலாம் என இந்த சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal