மாதம் 6 நாட்கள் வீதம், 5 மாதங்களுக்கு சம்பளம் பிடித்தம் – கேரள முதல்வர் முடிவு.!

கேரளாவில் பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டும் வகையில், அரசு ஊழியர்களுக்கு மாத  ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை கண்டுள்ளது. இதனை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டும் வகையில், அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு மாத  ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனை ஒரே மாதத்தில் சம்பளத்தை முழுவதும் பிடிக்காமல், மாதம் 6 நாட்கள் வீதம், 5 மாதங்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதேநேரம் மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவினை அமைச்சரவை குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது என கூறப்படுகிறது. பொருளாதாரம் மேம்படும் பட்சத்தில் பிடித்தம் செய்யப்படும் சம்பளத்தை மீண்டும் திருப்பி வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மாநில அரசின் இந்த முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனிடையே கேரளாவில் இதுவரை 438 பேர் பாதிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 323 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால் அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 14 மாவட்டங்களை 4 மண்டலமாக பிரித்து அதில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற பகுதிகளுக்கு ஊரடங்கில் தளர்வுகள் விடுக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்