5, 8 க்கு பொதுத்தேர்வு நடத்தினால் என்ன தப்பு!? பேரவையில் முதல்வர் ஆவேசம்

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தினால் என்ன தவறு என்று சட்டமன்றத்தில் முதல்வர்  பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, 5, 8ம் வகுப்பிற்கு முதலில் கட்டாயத்தேர்வு என அறிவிக்க வேண்டும்? திமுக எதிர்ப்பு தெரிவித்ததும் ஏன்? அந்த நிலைப்பாட்டி ல் இருந்து ஏன் பின்வாங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் பழனிச்சாமி நல்லது சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்ன தவறு?என்று ஆவேசமாக பேசினார்.மேலும் அவர் பேசுகையில் நல்ல எண்ணத்தில் தான் 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வைக்க திட்டமிட்டோம். ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்தன் காரணமாகவே கட்டாயத்தேர்வை ரத்து செய்தோம் தவிர திமுக எதிர்ப்பு தெரிவித்தற்காக  பின்வாங்கவில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் 5, 8ம் வகுப்பு தேர்வை எழுதினால் தான் மாணவர்களுக்கு பதற்றம் போகும். அப்போது தான் 10ம் வகுப்பு தேர்வை எந்தவித பதற்றம் இல்லாமல் எழுத முடியும். இப்போது விஞ்ஞான காலத்தில் இருக்கிறோம்.நம்  மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தினால் தான் உலக அளவிலான கல்வியைப் பெற முடியும். எனவே தான் பொதுத்தேர்வைக் கொண்டு வந்தோம்.கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்பதற்காகத்தான் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்தோம். நகர்ப்புறத்தில் இருக்கும்  மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெறத்தான் இத்தேர்வை அறிவித்தோம்.இத்தேர்வால் மாணவர்களின் தரம் உயரும். தேர்வு இல்லாததால் மாணவர்களின் தரமானது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் ஒரு போதும் தெரிவதில்லை. ஆனால் இத்தேர்வால் மாணவருக்கு பாதிப்பு என்று எதிர்கட்சியினர் ஒரு பொய்யை சொல்லி அதை நியாயப்படுத்த பார்க்கிறார்கள் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, ஒரு தேர்வின் மூலமாக கல்வித்தரம் உயராது 2011-12ம் ஆண்டில் NAS suveryயில் தமிழகத்தின் கல்வித்தரம் 2 இடத்தில் இருந்தது.ஆனால், தற்போது அந்த ஆய்வில் தமிழகம் கல்வித்தரத்தில் 8வது இடத்தில் இருக்கிறது. தேர்வு வைப்பது தான் கல்வித்தரமா? என்று கேட்டார் இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களைப் போராட்டக்களத்தில் எதிர்கட்சியினர் இறக்கி விடுகிறீர்கள். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

author avatar
kavitha