2022 ம் ஆண்டு இந்தியாவின் 75 வது சுதந்திரதினத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
மத்திய அரசின் வீட்டு வசதித் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்.
திட்டங்களை நிறைவேற்றும் விதத்தை மேம்படுத்துவதில் பயனாளிகளுடனான உரையாடல்கள் உதவிகரமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் மட்டுமே பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், தற்போது சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் திட்டம் நிறைவேற்றப்படுவதால் பயன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.