மரண அடி.. சதம் அடித்த விராட்கோலி..! ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி வந்தனர். இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் ராஜஸ்தான்  பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர்.

இதற்கிடையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் நிறைவு செய்தார். மற்றொரு முனையில் இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் அரைசதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 44 ரன்கள் எடுத்தபோது ஜோஸ் பட்லரிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 3 பந்திலே 1 ரன் எடுத்து போல்ட் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சவுரவ் சவுகான் நிலைத்து நிற்காமல் வெறும் 9 ரன்னில் வெளியேறினார். இது ஒரு புறம்  இருக்க தொடக்க வீரரான விராட்கோலி 67  பந்தில் சதம் விளாசினார். இதன் மூலம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் 8-வது முறையாக சதம் விளாசி உள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக முறை சதம் விளாசி விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் 6 சதங்களுடன் கிறிஸ் கெய்ல் உள்ளார். விராட் கோலி 113* ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 183ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டையும் , நந்த்ரே பர்கர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

author avatar
murugan