13,331 காலிப்பணியிடங்கள்;ரூ.7,500 முதல் ரூ.12,000 வரை தொகுப்பூதியம்;இவர்களுக்கு முன்னுரிமை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி,அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும்,இடைநிலை காலிப்பணியிடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கான ஒப்புகைச் சீட்டு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரால் பராமரிக்கப்படவேண்டும்.இது தணிக்கைக்கு உட்பட்டது ஆகையால் ஒப்புகைச்சீட்டு பள்ளித் தலைமை ஆசிரியரின் முழுக்கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.
  • அவ்வாறு பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு மேற்கண்ட காலத்திற்குள் (மாதத்திற்குள்) பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படின் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படவேண்டும்.
  • பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும்,அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
  • அவ்வாறே முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில், இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”,என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment