தெலுங்கானாவில் ஒரே நாளில் 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்… காரணம் என்ன?

Telangana: தேர்தல் விதி மீறல் காரணமாக 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த சூழல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டதாக 106 அரசு ஊழியர்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது, தெலுங்கானா மேடக் மக்களவை தொகுதியில் பிஆர்எஸ் சார்பில் வெங்கட்ராம ரெட்டி என்பவர் போட்டியிடும் அவர் தேர்தலுக்கான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாகவும், அந்த கூட்டத்தில் 106 அரசு ஊழியர்கள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக வேட்பாளர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அம்மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ஆட்சியர், பிஆர்எஸ் வேட்பாளர் வெங்கட்ராம ரெட்டி ஏற்பாடு செய்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் 106 பேர் பங்கேற்றது தெரியவந்தது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அந்த 106 அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, 17 மக்களவை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு, பகுஜன் சமாஜ் கட்சியுடன் (பிஎஸ்பி), கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இருப்பினும், ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்