தனது சகோதரரை விமர்சித்த இரு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த ராஜபக்சே!

இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளது.ஆனால்,கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையில் வெகுவாக குறைந்து,கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதன்காரணமாக,இலங்கை தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ் கையிருப்பு இல்லாமல்  தத்தளிக்கிறது.குறிப்பாக, அரிசி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டணத்தை அரசாங்கத்தால் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும்,அதே நேரத்தில்,மின்வெட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என இலங்கை மக்கள் தொடர்ச்சியாக இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு அதில் இருந்து மீள இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில்,இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதார பிரச்சனைகளுக்கு அந்நாட்டு நிதி அமைச்சரும்,அதிபர் மகிந்த ராஜபக்சேவின்  சகோதரருமான பசில் ராஜபக்சேதான் காரணம் எனக் கூறிய இரு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,மின்சாரத் துறை அமைச்சர் உதய கம்மன்பில மற்றும், தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் அரசியலமைப்பின் 47 (2) வது பிரிவின் கீழ் இலங்கை அதிபரால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.