“TTV தினகரன் கொஞ்சம் ஓரமா போங்க …” எம்.எல்.ஏ கலைச்செல்வன் பேச்சு!

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் இன்று முதல்வர் அவர்களை சந்தித்து தன்னை மீண்டும் அதிமுக வில் இணைத்துக் கொண்டார்.

கடந்த மாதம் வரை அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி  தினகரனின் ஆதரவாளராக இருந்து வந்தார். இதனால் சட்டமன்ற சபாநாயகர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எம்.எல்.ஏ பதவியை பறிக்கவும் திட்டமிட்டார். அதற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கலைச்செல்வன். இது ஒருபுறம் இருக்க, நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் அமமுக படுதோல்வி அடைந்தது.  இதைக் கொண்டு  நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில், ஒவ்வொருவராக விலகி அதிமுகவில் இணைந்தனர். அந்த வரிசையில் இன்று அதிருப்தி எம்.எல்.ஏ கலைச்செல்வன் அவர்களும் இன்று அதிமுக வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது கூறிய அவர், இது தான் உண்மையான அதிமுக என்று புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபம் இல்லை என்றும் இது அண்ணன்- தம்பி பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டிடிவி தினகரன் இனிமேலாவது ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கலைச்செல்வன் கூறியுள்ளார்.