ஆரே பகுதியில் மரங்களை வெட்ட தடை ! உச்சநீதிமன்றம் உத்தரவு

மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவையை அதிகரித்து வருகிறது மகாராஷ்டிரா அரசு.இந்த நிலையில் தான் மும்பையில் உள்ள ஆரே காலனியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்தது.இதற்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்தது.
இதனால்  ஆரே காலனியில் உள்ள 2700 மரங்களையும் வெட்ட  முடிவு செய்தது மெட்ரோ ரயில் நிர்வாகம். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,பின்னர் மரங்களை வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி  பலர் மரங்கள் வெட்டப்படுவதை புகைப்படமாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது.
இதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கினை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.இன்று இதன் மீதான விசாரணை நடைபெற்றது.இதில்  மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம்  தடை விதித்தது.மேலும் இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் யாரையேனும் கைது செய்து விடுவிக்காமல் இருந்தால்,உடனடியாக விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது என்பது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு  விசாரணையை அக்டோபர்  21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.