செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் – அதிமுக உத்தரவு

திருமணவேல் அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.  அதிமுகவின் தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் திருமணவேலனுக்கும் ,செல்வனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.திருமணவேல் கூறியதன் அடிப்படையில் செல்வன் மற்றும் அவரது சகோதரர் மீது தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தயார் புகார் அளித்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த  வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்துள்ளனர் என்று தூத்துக்குடி எஸ்.பி தெரிவித்திருந்தார்.மேலும்  இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.மேலும் அதிமுகவினர் யாரும் திருமணவேலுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.