டாஸ்மாக்கை திறந்தால் , மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் – ரஜினிகாந்த் அதிரடி

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் என்று  டாஸ்மாக் குறித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். 

தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு . அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் கொரோனா பரவும் என்றும் கருத்துகள் எழுந்தது . ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் , ஊரடங்கு உள்ளபோது மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.மேலும் ஆன்லைன் மூலம் மது விற்றுக்கொள்ளலாம் என கூறியது.பின்னர் உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் டாஸ்மாக் திறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.