காஷ்மீர் விவகாரம்: ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- பிரகாஷ் ஜவடேகர்

காஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார் .அவரது பதிவில், நான் இந்த அரசுடன் பல விஷயங்களில் வேறுபடுகிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்கிறேன். காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். காஷ்மீர் பிரச்சினையில், பாகிஸ்தான் உள்பட எந்த ஒரு அந்நிய நாடும் தலையிட இடம் இல்லை.

ஜம்மு காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது. அங்கு உள்ள வன்முறைகள் பாகிஸ்தான் ஆதரவுடன், தூண்டுதலுடன் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு முழு ஆதரவு அளிக்கும் நாடு பாகிஸ்தான் என்பது உலகம் முழுவதும் தெரியும் என்று பதிவிட்டார்.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் ராகுல் கருத்து குறித்து கூறுகையில், ஜம்மு காஷ்மீர் குறித்த தனது கருத்துக்கு ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ராகுல்காந்தி, காஷ்மீர் விவகாரத்தில் நாட்டை அவமதித்து உள்ளார், காஷ்மீரில் எதுவும் தவறாக நடக்கவில்லை.காங்கிரஸ் கட்சியில் தான், எல்லாம் தவறாக நடந்து கொண்டிருக்கிறது என்று  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.