காரை பிரசவ வார்டாக மாற்றிய போலீஸ்.! பிறந்த குழந்தைக்கு அதிகாரி பெயர் சூட்டிய தாய்.!

காரிலேயே பிரசவம் நடக்க உதவிய பெண் போலீஸ் அதிகாரியின் பெயரையே தன் குழந்தைக்கு சூட்டி நன்றி கடன் செலுத்திய தாய்.

ராஜஸ்தான் பார்மர் பகுதியை சேர்ந்த நைனு கன்வார் என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது சகோதரர் தனது காரில் நைனுவை ஜோத்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியிலேயே கார் பழுதாகி நின்றுவிட, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணிக்கு வலி அதிகரித்துள்ளது.

அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை கமிஷனர் ப்ரீத்தி சந்திரா, நைனுவை வேறொரு காரில் மாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை இருப்பதை உணர்ந்து, காரையே பிரசவ வார்டாக மாற்றினார். அந்த காரை சுற்றி நான்கு புறமும் ஆண் காவலர் பிடித்தபடி மறைத்துக்கொள்ள, பெண் காவலர்கள் கர்ப்பிணி பெண்ணை கவனித்துக் கொண்டனர். மருத்துவர்களை அழைத்து வர சிலர் சென்ற நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே காரிலேயே சுக பிரசவம் நடந்தது. நைனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கும், தனது குழந்தைக்கும் ஈடு செய்ய முடியாத உதவியை செய்த பெண் போலீஸ் அதிகாரிக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், அந்த போலீஸ் துணை கமிஷனர் பெயரையே நைனு, தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார். இதுகுறித்து கூறிய துணை கமிஷனர், தனக்கு பெருமையாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு எப்போதும் தனது ஆசிர்வாதம் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்