தாய் , அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்றதால் மனைவியை கொன்ற கணவன்.! ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!

  • தன் தாய் வீட்டிற்கும் , அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததால் கணவன் ,மனைவிக்கு  இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்த கணவன்.
  • கணவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு. இவர் கலைவாணி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து  செய்து கொண்டனர்.

ஆனால் திருமணம் முடிந்த ஐந்து மாதங்கள் ஆகியும் பாபு வேலைக்கு செல்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலைவாணி தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது கலைவாணி கர்ப்பம் அடைந்து இருந்தார்.

இதனால் பாபு தன்னுடைய வீட்டிற்கு வருமாறு கலைவாணியை அழைத்தார் .ஆனால்  அதற்கு கலைவாணி மறுப்பு தெரிவித்துவிட்டார்.இதையடுத்து பாபு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த  11 மாதம் ஆன பிறகு வெளிநாட்டில் இருந்து பாபு ஊருக்கு வந்தார்.

ஊருக்கு வந்த பாபு பெரியவர்களை அழைத்து கொண்டு கலைவாணி தாய் வீட்டிற்கு சென்று கலைவாணியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் அடுத்த சில நாட்களில் தங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது குழந்தையின் பிறந்தநாளை காலையில் கலைவாணி தாய் வீட்டிலும் ,  மாலையில் பாபு வீட்டிலும் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து கலைவாணி தன் தாய் வீட்டிற்கும் , அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாபு கலைவாணியை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் போலீசார் பதிவுசெய்து பாபுவை கைது செய்தனர் .

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் பாபு  மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

author avatar
murugan