7 பேர் விடுதலை : ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் -முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்பொழுது ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனின் மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்றும் நளினியின் மனு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தது.மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை 2018 -ஆம் ஆண்டிலே நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக  கூறினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில்,பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது என்று பேசினார்.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்.