“அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் குமரிக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்”- சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்..!

அடுத்த 24 மணி நேரத்தில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார்.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தளவில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறினார்.

மேலும், கடல் பகுதியில் காற்று மணிக்கு 45 கி.மீ. – 55 கி.மீ. வரை வீசக்கூடும். இதன்காரணமாக, மீனவர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்கு குமரிக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.