தந்தை -மகன் உயிரிழந்த விவகாரம் ! சிபிஐ விசாரணைக்கு அனுமதி கோரி அரசு முறையீடு

பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர்  உயிரிழந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி கோரி தமிழக அரசு  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி   தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி கோரி தமிழக அரசு  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டியது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.மேலும் இந்த வழக்கின் விசாரணையில் போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்து நீதிமன்றம்.