“நெக்ஸ்ட்” தேர்வு வேண்டாம் – மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம்!

தேசிய மருத்துவக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய தேசிய மருத்துவக் கல்வி கொள்கை கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும் , இந்திய மருத்துவ கவுன்சில் இனி தேசிய மருத்துவ கவுன்சிலாக மாற்றப்படும் ஆகிய விதிமுறைகள் இந்த புதிய மருத்துவ கல்வி கொள்கையில் உள்ளது. மத்திய அரசின் இந்த விதிமுறைக்கு நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த தேசிய மருத்துவ கல்லூரி மசோதாவை திரும்ப பெற வேண்டும், குடியரசு தலைவர் இந்த மசோதாவை அனுமதிக்க கூடாது மருத்துவ துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று, திருநெல்வேலியில் நடந்த மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.