பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் – சிதம்பரம்

பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் என்று  சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 17 தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் பேருந்து,   விமான மற்றும்  ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இதனிடையே ரயில்வேதுறை வெளியிட்ட அறிவிப்பில்,மே 12 முதல் பயணிகள் சிறப்பு ரயில் இயங்கும் என அறிவித்தது. முதற்கட்டமாக வரும் 12 ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்றும்  ரயிலில் பயணிகள் ஏறுவதற்கு முன் முகமூடி அணிந்தும்,  சோதனை  உட்படுத்தப்படுவது கட்டாயமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

ரயில் அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் சரியான நேரத்தில் தனித்தனியாக வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.  இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது. முன்பதிவை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே  செய்யமுடியும் என  ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும். பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால், பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம் என்று பதிவிட்டுள்ளார்.