பின்வாங்கிய தினகரன் !வேலூர் மக்களவையில் அமமுக போட்டியிட போவதில்லை-தினகரன் அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.

இதன் பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றார்.அங்கு அவருக்கு சென்றவுடனே இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.அதை பயன்படுத்தி செந்தில் பாலாஜி வெற்றியும் பெற்றுள்ளார்.மற்றொரு முக்கிய நிர்வாகியுமான தங்க தமிழ் செல்வனும்   அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றார்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இன்று விருத்தாசலத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,  வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.அமமுகவை கட்சியாக பதிவு செய்யும் பணி முடிவடைந்து. மேலும் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க தேவை இருக்காது. நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தினகரன்.