தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணமகன் மணமேடைக்கு செல்லும் முன் ஜனநாயக கடமையை ஆற்றிய இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும், பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. டெல்லியில் தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, 1,46,92,136 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மக்கள் திரளாக வந்து வரிசையில் நின்று அவர்களது ஜனநாயக கடைமையையும், ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் டெல்லி ஷகர்பூரில் உள்ள எம்.சி.டி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடியில் ஒரு மணமகனும் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். அதாவது திருமணம் இன்று நடக்க இருக்கும் நிலையில் மணமகன் திருமண ஆடை அணிந்து, அவரது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளார். இந்த நிலையில் மணமகன் மணமேடைக்கு செல்லும் முன் ஜனநாயக கடமையை ஆற்றிய இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 4.33 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என குறிப்பிடப்படுகிறது.