620 கி.மீ. தொலைவு ..!குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட மனித சங்கிலி

  • குடியுரிமை திருத்த சட்டத்தை கேரள அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 
  • இதன் ஒரு பகுதியாக கேரளாவில் பிரம்மாண்ட  மனித சங்கிலி போராட்டத்தை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்ததுள்ளது. 

அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் : 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை  கொண்டுவந்தது.

கேரளா ,பஞ்சாப்,மேற்குவங்கம்  உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு :

இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.ஆனால் இந்த சட்டத்திற்கு ஆரம்ப முதலே கேரள அரசு,பஞ்சாப்,ராஜஸ்தான் ,மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

கேரளா தொடர்ந்து எதிர்ப்பு :

குறிப்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதன் விளைவாக பினராயி விஜயன் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. எதிர்கட்சியான காங்கிரசும், ஆளும்கட்சியுடன் கைகோர்த்து இந்த போராட்டத்தில் பங்கேற்றது.இதன் பின்பு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கும் தொடர்ந்து உள்ளது.கேரளாவை போலவே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மனித சங்கிலி போராட்டம் :

இந்நிலையில் கேரள அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிராக தொடர்ந்து தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.இதன் விளைவாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுமார் 620 கி.மீ தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டத்தை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்ததுள்ளது. இந்த மனிதச் சங்கிலி போராட்டம், வடக்கு கேரளாவின் காசர்கோடு நகரில் தொடங்கி, தெற்கே களியக்காவிளை வரை நீடித்தது.இந்த மனித சங்கிலி போராட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து தொடங்கி வைத்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஏறக்குறைய  70 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் மாணவர்கள், முதியவர்கள், புதுமண தம்பதியினர் என பலரும்  கலந்துக்கொண்டனர்.