போலீசார் கண்காணித்த  ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயன்ற இளைஞர் கைது

மயிலாதுறை அருகே ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூரில் போலீசார் ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்து வந்த நிலையில் கேரம் விளையாடி கொண்டு இருந்த இளைஞர்கள் கேமராவை பார்த்தவுடன் அலறி அடித்து ஓடினார்கள்.

அதில், ஒருவர் கையில் கேரம் பலகையை வைத்து கேமராவை மறைத்தது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வகையில் தான் மயிலாடுதுறையில் உள்ள சீர்காழியில் போலீசார் ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கு இடையில் கடந்த 24-ஆம் தேதி எடமணல் என்ற பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். இதனை போலீசார் ட்ரோன் மூலமாக கண்காணித்தனர். கேமராவை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடினார்கள். அந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் ட்ரோன் கேமராவை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்.

பின்னர் அந்த நபர் தப்பி ஓடினார். இதன் பின் போலீசார் விளையாடிய இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து சென்று உறுதிமொழி ஏற்கவைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனையயடுத்து போலீசார் முருகானந்தம் என்ற இளைஞரை கேமராவை தாக்கியது தொடர்பாக கைது செய்தனர்.