தமிழில் குடமுழுக்கு தொடர்பாக நெல்லையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து எழுத்துப்பூர்வ கருத்துக்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்து குடமுழுக்கு விழாவை நடத்துவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்ற நிலையில், இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி அதன் முடிவுகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ஆலோசனை கூட்டம் :
அதன் படி, தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் தனியார் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து அமைப்பினர், பாஜகவினர், சிவனடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அறநிலையத்துறை குழு :
இதில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் – பேரூர் ஆதீனம் மருதாச்சலம் அடிகளார், சுகிசிவம் ஆகியோர் அறநிலை துறை சார்பாக நியமிக்கப்பட்ட குழுவாக இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினர்.
தமிழுக்கு எதிர்ப்பு :
அப்போது ஆரம்பம் முதலே, சிவனடியார்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஆகம விதிகளின் படி தான் இத்தனை நாள் குடமுழுக்கு நடைபெற்றது. அதன்படி தான் இனிமேலும் நடைபெற வேண்டும் என கூறவே , அதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் உள்ள கோவில்களில் பூஜைகள் நடைபெறுவது என்பதால், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கூறினார்.
காவல்துறையினர் சமாதானம் :
இதில் இரு தரப்பினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, காவல்துறை அதிகாரிகள் உள்ளே வந்து அவர்களை சமாதானம் செய்து, பின்னர் அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை எழுத்து பூர்வமாக மட்டுமே அளிக்க வேண்டும் என கூறியதும், சலசலப்பு கொஞ்சம் அமைதியாக மாறியது.