WPL2023: குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!

மகளிர் ஐபிஎல் தொடரில் குஜராத்-பெங்களுரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

மகளிர் ஐபிஎல் தொடர் என்றழைக்கப்படும் அறிமுக மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மகளிர் தினத்தன்று மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்தது.

குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், டங்க்லே(65 ரன்கள்) மற்றும் ஹர்லீன் தியோல்(67 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் ஷ்ரேயங்கா பட்டீல் மற்றும் நைட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் ஸ்ம்ரிதி மந்தனா(18 ரன்கள்), சோபி டெவின்(66 ரன்கள்) நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பிறகு களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 32 ரன்களில் ஆட்டமிழக்க ஹீதர் நைட் இறுதி வரை வெற்றிக்கு போராடி 30* ரன்கள் அடித்தார், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் பெங்களூரு அணி 12 ரன்கள் அடித்து போராடி தோற்றது.

இதனால் பெங்களூரு அணி 190/6 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் அடிக்க முடிந்தது, குஜராத் அணி சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்களும், அன்னாபெல் சதர்லேண்ட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, குஜராத் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்ட நாயகியாக டங்க்லே தேர்வு செய்யப்பட்டார். பெங்களூரு அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் இன்னும் முதல் வெற்றியை எட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment