பிசிசிஐ அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ள மகளிர் ஐபிஎல் தொடரில், அணிகளின் அடிப்படை விலை ₹400 கோடி என நிர்ணயித்துள்ளதாக தகவல்.
2008ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் தொடர் இந்தியாவில் 15 சீசன்களாக உலகெங்கும் பல கிரிக்கெட் ரசிகர்களுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பல வெளிநாட்டு அணிகளின் முக்கிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றனர்.
தற்போது பிசிசிஐ இதன் அடுத்தகட்டமாக மகளிருக்கும் ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு மார்ச் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. 5 அணிகளுடன் இந்த மகளிர் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணிகளுக்கான ஏலத்தொகையாக அடிப்படை விலை ரூ.400 கோடி என நிர்ணயித்துள்ளதாகவும், ஆண்கள் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் இந்த மகளிர் அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியானது.
2008 ஆம் ஆண்டு ஆண்கள் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச விலையாக விற்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் விலை 446 கோடி ரூபாயை அடிப்டையாகக் கொண்டு தற்போது பிசிசிஐ, இந்த அடிப்படை விலையை நிர்ணயித்ததாக தெரிகிறது. ஏலம் நடைபெறும் தேதி குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை.
தற்போது கிடைத்த தகவலின் படி சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.