RSS பேரணியில் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்ட நாளான ‘விஜயதசமி (அக்டோபர் 24)’ நாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 22 மற்றும் 29 என இரு தினங்கள் (ஞாயிற்று கிழமைகள்) தென் தமிழகத்தில் இந்துத்துவா அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பினர் பேரணி நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.

 அக்டோபர் 22ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி 12 மாவட்டங்களிலும் என மொத்தமாக 14 தென் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் பேரணி நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், காவல்துறை அனுமதி அளிப்பது குறித்து எந்தவித பதிலும் கூறாத காரணத்தால், மதுரை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் , RSS பேரணிக்கு காவல் துறை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவானது இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விஜய தசமியை முன்னிட்டு 14 மாவட்டங்களில் RSS பேரணி.! உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை.!

அதில், இதனை விசாரித்த நீதிபதி ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்தார். பின்னர் நீதிபதி இளங்கோவன், ஆர்எஸ்எஸ் அமைப்பானது பதிவு செய்யப்பட்ட அரசியல் இயக்கமா.? இந்த பேரணியின் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தார்.

இதனை அடுத்து, RSS பேரணி எங்கு ஆரம்பித்து எங்கு முடியவுள்ளது.? யார் அந்தந்த மாவட்டங்களில் தலைமை ஏற்க உள்ளனர்.? யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் உள்ளிட்ட விவரங்களை பிராமண பத்திரமாக தயார் செய்து அதனை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை நாளை ஒத்திவைத்தார் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.