ஒரே அரசாணையில் “நாம் யார்?” என்று சிலரின் முகத்தில் ஓங்கி அறைந்து இருப்பதற்கு பாராட்டுக்கள் – வைகோ

திமுக அரசு தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டான் நிலைநாட்டி இருக்கிறார் என்று வைகோ பாராட்டு.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு பாராட்டுகள் குவிந்தன. அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது. அதே நிலை தற்போதும் தொடர்வதற்கான பல அரசாணைகளை வெளியிட்டு வருகிறது திமுக அரசு.

இனி தமிழே தெரியாமல் எவரும் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய விதிகள் மாற்றப்பட்டு, டிசம்பர் 1ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் இருபது விழுக்காடு முன்னுரிமை அளிக்கும் விதிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது தமிழ்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்து இருப்பது முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசின் சாதனை மகுடத்தில் வைரமாக ஒளி வீசுகிறது. இந்த ஒற்றை அரசாணையின் மூலம் “நாம் யார்?” என்று சிலரின் முகத்தில் ஓங்கி அறைந்து இருப்பதற்கு பாராட்டுக்கள்.

பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப் பாட்டாகப் பாடப்பட வேண்டும் என்பது பாராட்டுக்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டியிருப்பது வாழ்த்திப் போற்றத்தக்கது.

திமுக அரசு தமிழ் அரச, தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார் என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்