உலகமே இந்தியாவைப் பாராட்டினாலும், காங்கிரஸ் அதைச் செய்யாது – பிரகாஷ் ஜவடேகர் .!

ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு 4-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 1,45,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,167 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்ததாகவும், ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்து குறித்து மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர்  கூறுகையில்,  ஊரடங்கு அமலாக்கப்பட்டபோது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக மூன்று நாட்கள் ஆனது, தற்போது 13 நாட்கள் ஆகிறது.  இதுவே ஊரடங்கின் வெற்றி தான். 

 உலகமே இந்தியாவைப் பாராட்டினாலும், காங்கிரஸ் அதைச் செய்யாது. 45 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருகளுக்குச் செல்ல 3,000 ரயில்கள் இயக்கப்பட்டன. பா.ஜ.க  ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடந்துள்ளதா..?

ஜெர்மனி,ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளன. அவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்  பாதிப்பு குறைவுதான் என கூறினார்.

author avatar
Dinasuvadu desk