தனியாக பிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.!

பிரதமர் மோடி அரசு முறை பயணமாகத்தான் சென்னை வந்தார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விழாவில் தமிழகத்தில் பலவேறு திட்டங்களை தொடங்கி வைத்து விழா முடிந்த பின்னர் தனியாக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசித்து உள்ளார். முதல்வர், பிரதமர் மோடி இடையேயான ஆலோசனையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பிரதமர், முதல்வர் இடையேயான ஆலோசனையில் பேசியது என்ன என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிரதமர் அரசு முறை பயணமாகத்தான் சென்னை வந்தார். வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையால் வடசென்னை மக்களின் கனவு நிறைவேறியது என கூறியுள்ளார்.

மேலும் பிரதமரை, முதல்வர் சந்திப்பது என்பது சாதாரணமான ஒன்றுதான். பிரதமர் 100 சதவீதம் அரசு முறை பயணமாகத்தான் வந்தார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, பல்வேறு திட்டங்கள் குறித்து நிதி ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்த வகையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளார். கூட்டணியில் எந்த பிரச்சனையும், குழப்பமோ இல்லை, வலுவாக உள்ளது. உரிய நேரத்தில், உரிய தருணத்தில் சரியாக நடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி சென்னை, சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என தமிழில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்