அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? – கருணாஸ் பரபரப்பு அறிக்கை!

துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள், அதிமுகவிற்கு தோல்வியை பரிசாக தந்த மக்களுக்கு நன்றி என கருணாஸ் அறிக்கை.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற, அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்,  அதிமுகவிற்கு தோல்வியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வென்றுள்ளது. அஇஅதிமு. சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

குறிப்பாக அ.தி.மு.க வின் கோட்டை என்று பிதற்றிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது. அதிமுகவிற்கு தோல்வியை கொடுத்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? துரோகம்தான். பக்கத்திலேயே இருந்தோர்க்கு செய்தத் துரோகமும், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகமும்தான் காரணம்.

அதிமுக தோல்வி மக்கள் தந்த பரிசு மட்டுமல்ல, சிறந்த பதிலும்கூட நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அதிமுகவின் துரோகங்களைப் பட்டியலிட்டு அறிக்கை விட்டிருந்தேன். ஆனால் மக்கள் நான் எதிர்ப் பார்த்தைவிட கூடுதலான தோல்வியை அதிமுகவிற்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இது தொடக்கம்தான் இன்னும் பல்வேறு விளைவுகளையும் தோல்விகளையும் அதிமுக எதிர்காலத்தில் சந்தித்துக்கும்.

மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை எடப்பாடி, ஓ.பி.எஸ். கூட்டணியே உடைத்து சுக்குநூறாக்கும், அவர்கள் அம்மாவிற்கு செய்யும் பாவமும், சின்னம்மாவிற்கு செய்த துரோகமும் இனி அவர்களை துரத்திக்கொண்டே இருக்கும். துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள் அ.இ.அ.தி.மு.க.விற்கு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை பரிசாகவும், பதிலாகவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்